நிலநடுக்கத்தால் நிலைக்குலைந்த வெனிசுலா ; 1,430 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது.
இதனை அந்நாட்டின் தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் (Jorge Rodríguez) நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மீட்பு பணிகள்
மேலும், இந்த இயற்கை பேரிடரில் 3,238 பேர் காயமடைந்துள்ளதாகவும், 3,142 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்டு 72 மணி நேரத்தைக் கடந்துவிட்டதால், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.
எனினும், மீட்புக்குழுவினர் தொடர்ந்து நம்பிக்கையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை 430-க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இது மீட்புக் குழுவினருக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், பணிகளில் தொய்வையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஸ்பெயின், கொலம்பியா, மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் உள்ளிட்ட 24 நாடுகள் தங்களது மீட்புக் குழுக்களையும் உதவிப் பொருட்களையும் வெனிசுலாவிற்கு அனுப்பியுள்ளன.
தற்போது 2,700-க்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புப் பணியாளர்கள் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
தலைநகர் கராகஸ் (Caracas) அருகே உள்ள சிமோன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு ஓடுதளம் தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அவசர உதவிப் பொருட்கள் தடையின்றி வந்தடைவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலோர மாநிலமான லா குவைராவில் (La Guaira) 60% மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.