அமெரிக்க 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் சாதனை படைத்த ஆப்ரிக்க சிறுமி
அமெரிக்காவில் நடந்த 'ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டியில், ஆப்ரிக்க - அமெரிக்க சிறுமி ஸாய்லா அவந்த்கார்ட், 14, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அத்துடன் இப்போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை, இந்திய வம்சாவளி சிறுமியர் கைப்பற்றியுள்ளனர். கடினமான ஆங்கில வார்த்தைகளின் எழுத்துக்களை தவறின்றி கூறும் ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி, அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடக்கிறது. கடந்த 1925ல் துவங்கிய இந்த போட்டி, இரண்டாம் உலகப் போரின் போது இரு முறையும், கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஒருமுறையும் தடைபட்டுள்ளது.
இந்த போட்டியில், 20 ஆண்டுகளாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். நடப்பு ஆண்டுக்கான ஸ்பெல்லிங் பீ போட்டியின் முதல்நிலை சுற்றுக்கள், 'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்பட்டதில் இருந்து, 11 சிறுவர் - சிறுமியர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். இதில், பெரும்பான்மையானவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோவில் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில், ஆப்ரிக்க - அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஸாய்லா அவந்த்கார்ட், சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதேவேளை இந்த போட்டியில் ஆப்ரிக்க - அமெரிக்க சிறுமி சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சைத்ரா தும்மாலா, 12, பாவனா மதினி, 13 ஆகியோர், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர். இந்த நிலையில் வெற்றி பெற்ற சிறுமி ஸாய்லாவுக்கு, சாம்பியன் பட்டத்துடன், 38 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்(Jill Biden), வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் வெற்றி பெற்றுள்ள சிறுமி ஸாய்லா, கூடைப்பந்து விளையாட்டில் தனித் திறமையுடன் விளங்குபவர். மைதானத்தில் நிறைய பந்துகளை ஒரே நேரத்தில் வைத்து விளையாடியதற்காக, அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

