குழந்தைகளிடமுமா இனவெறுப்பு?: பத்தே விநாடிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு காட்சி
அமெரிக்காவில் இனவெறியின் உச்சத்தைக் காட்டும் காட்சி ஒன்று வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.
சமீப காலமாக, கருப்பினத்தோர் வெள்ளையினத்தவர்களுடன் கைகோர்த்து நண்பர்களாக நிற்கும் ஏராளம் காட்சிகள் திரைப்படங்களில் வெளியாகி வருகின்றன. ஆனால், அவையெல்லாம் பெரும்பாலும் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிப்பதுபோல் ஒரு சம்பவம் நடைபெற்று கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிலதெல்பியாவிலுள்ள தீம் பார்க் ஒன்றிற்கு இரண்டு குழந்தைகள் தங்கள் உறவினருடன் சென்றுள்ளன. அப்போது பிரபல கார்ட்டூனில் இடம்பெரும் Rosita என்னும் கதாபாத்திரத்தின் வேடமணிந்த ஒருவர் மக்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டும், ஹை ஃபைவ் கொடுத்துக்கொண்டும் வந்துள்ளார்.
அதைக் கண்ட அந்த குழந்தைகளில் ஒன்று தன் கைகளை விரித்தபடி Rosita, Rosita என அழைத்தபடி அந்த பொம்மை வேடத்தை அணிந்திருந்த நபரை நோக்கி ஓட, அந்த நபரோ, உன்னை அணைக்க மாட்டேன் என்பதுபோல கையசைத்துவிட்டு, அந்தக் குழந்தையை விட்டு விலகிச்சென்றுவிட்டார்.
பாவம் அந்தக் குழந்தை... என்ன நடக்கிறது என்று புரியாமல், தன் அருகிலிருந்த பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் ஹை ஃபைவ் கொடுத்த Rosita தன்னை ஏன் அணைத்துக்கொள்ள மறுத்துவிட்டது என்பது புரியாமல் திகைத்துப் போய் நின்றுவிட்டது.
இப்படி Rositaவால் நிராகரிக்கப்பட்ட அந்தக் குழந்தைகள் இருவரும் கருப்பினக் குழந்தைகள்!
தாங்கள் கருப்பினக் குழந்தைகள், அதனால்தான் தங்களை Rosita அணைத்துக்கொள்ளவில்லை என்பது கூட அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாது. வளர்ந்து வரும்போது உண்மை தெரியவந்தால், அந்தக் குழந்தைகள் சமுதாயத்தில் எப்படி உணருவார்கள்?
இந்த சம்பவத்தை அந்தக் குழந்தைகளோ, அவர்களுடைய பெற்றோரோ எப்படி மறப்பார்கள்?
குழந்தைகளின் தாயாகிய Jodi Brown, இந்த வீடியோவை சமூக ஊடகம் ஒன்றில் பகிர, காண்போர் கொந்தளித்துபோயிருக்கிறார்கள்.
இனி அந்த தீம் பார்க்கில் கால் வைக்கமாட்டேன் என Jodi Brown கூற, பலரும் அந்த தீம் பார்க்கை புறக்கணிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இதற்கிடையில் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ள தீம் பார்க் நிர்வாகம், வருங்காலத்தில் தனது ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க இருப்பதாக உறுதிகூறியுள்ளது.