பொதுமக்கள் எதிர்ப்பால் 3% வரியை திரும்பப்பெற்றது நேபாள அரசாங்கம்
தனியார் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது விதிக்கப்பட்டிருந்த 3 சதவீத வரியை, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நேபாள அரசாங்கம் திரும்பப்பெற்றுள்ளது.
நாட்டின் வரி வரம்பை விரிவுபடுத்தவும், அரசின் வருவாயை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் என்ற நோக்கில் இந்த புதிய வரி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், இந்த நடவடிக்கை கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகளின் செலவை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இதையடுத்து, அரசின் முடிவை மறுபரிசீலனை செய்த நேபாள அரசு, குறித்த 3 சதவீத வரியை தற்போதைக்கு அமல்படுத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தனது சமூக ஊடகப் பதிவில், “நாட்டின் வரி வரம்பை விரிவுபடுத்தவும், பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், மக்களின் உணர்வுகளுக்கும் கவலைகளுக்கும் அரசு உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
அதன்படி, தனியார் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான 3 சதவீத வரியை தற்போதைக்கு அமல்படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த அறிவிப்பு, வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்வி நிறுவனங்கள், சுகாதாரத் துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.