கனேடிய மாகாணம் ஒன்றில் ஒரே நாளில் உச்சம் தொட்ட மரண எண்ணிக்கை
ஆல்பர்ட்டாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆல்பர்ட்டாவில் வியாழக்கிழமை மதியத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 என தெரிய வந்துள்ளது. மேலும், புதிதாக 916 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
7 நாட்களில் சராசரியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை 890 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணம் முழுக்க மொத்தம் 13,423 பேர்கள் கொரோனா பாதிப்புடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள 30 பேர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளார்.
இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிக்கக்கூடியது என தெரிவித்துள்ள அவர், சமீப நாட்களில் பரவல் அதிகரித்துள்ளமை காரணமாகவே இறப்பும் உயர்ந்திருக்கிறது என்றார்.
இதனால் நேரிடையாக மக்கள் அதிகம் தொடர்பு கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும் என டாக்டர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளார். ஆல்பர்ட்டாவில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 2,930 என பதிவாகியுள்ளது.
இறந்த 30 பேர்களில் 70, 80 மற்றும் 90 வயதுடையவர்களே அதிகம் எனவும் மூவர் மட்டுமே 50 மற்றும் 60 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஆல்பர்ட்டா மாகாணத்தில் தற்போது 1,016 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 231 பேர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். வியாழக்கிழமை மட்டும் 67 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடியுள்ளனர் என தெரிய வந்துள்ளது.