ஆசியர்களுக்கு எதிரான இனவெறுப்பு கனடாவில் அதிகரிப்பு: ஆய்வு முடிவுகள்
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து ஆசியர்கள் மீதான இனவெறுப்பு கனடாவில் பரவலாக காணப்படுவதும், அது கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
The Angus Reid என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், 71 சதவிகித ஆசியர்கள், இனவெறுப்பும், தங்கள் மீது காட்டப்படும் பாகுபாடும் கடந்த ஆண்டில் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
55 சதவிகித ஆசியர் அல்லாதோர், அது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளனர். ஆசியர்களில் 58 சதவிகிதம் பேர் தாங்கள் ஆசிய இனவெறுப்பு குறித்த செய்திகளைக் கண்டுள்ளதாகவும், கேள்விப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில், 31 சதவிகிதம் பேர், தாங்களே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
61 சதவிகிதத்தினர், கொரோனா தொடங்கியபின்னர், இனவெறுப்பு சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் தங்கள் அன்றாட செயல்பாடுகளை மாற்றியமைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்கள். 13 சதவிகிதத்தினர், தாங்கள் அவமதிக்கவோ அல்லது மிரட்டவோபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அந்த ஆய்வின் முடிவுகள், இப்படி இனவெறுப்பு அல்லது பாகுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டது இளைஞர்கள்தான் என்றும் தெரிவித்துள்ளன.