கற்கால மக்களின் வானியல் திறனை நிரூபிக்கும் அரிய தொல்பொருள் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உலகப் புகழ்பெற்ற ஸ்டோன்ஹெஞ்ச் கற்கோபுரம் உருவாக்கப்படுவதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாகக் கருதப்படும் 5,000 ஆண்டுகள் பழமையான மரத்தாலான நினைவுச் சின்னம் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுக்கு முந்தைய அமைப்பு, சுமார் 120 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்ட மரத்தூண்களைக் கொண்டதாகும்.

சூரியனின் நகர்வைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போதைய ஸ்டோன்ஹெஞ்சைப் போலவே கோடைகால மற்றும் குளிர்கால சூரிய மாற்ற நாட்களைத் துல்லியமாகக் குறிவைத்து வழிபாட்டு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அகழ்வாராய்ச்சியின் போது விலங்குகளின் எலும்புகள், மண்பாண்டங்கள் மற்றும் சூரிய வட்டத்தை பிரதிபலிக்கும் அரிய வட்ட வடிவக் கத்தி உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இக்கண்டுபிடிப்புகள், அந்த இடம் முக்கியமான வழிபாட்டுத் தலமாக விளங்கியதை உறுதிப்படுத்துகின்றன.
வெசெக்ஸ் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, கற்கால மனிதர்களின் வானியல் அறிவு மற்றும் அவர்களின் வழிபாட்டு மரபுகளின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.