உலக நாடுகள் பலவற்றில் மாயமாகும் பூச்சி வகைகள்
உலக நாடுகள் பலவற்றில், பல வகை பூச்சிகள் மாயமாகிக்கொண்டே வருகின்றன.
இரவு நேரத்தில் தெரு விளக்குகளின் அருகே வகைவகையான பூச்சிகள் பறப்பதையும், வாகனத்தில் செல்லும்போது, பறந்துவரும் பல வகை பூச்சிகள் வாகனங்களின் கண்ணாடியில் மோதுவதையும் கண்ணால் கண்டவர்கள் நாம்.

ஆனால், அந்த பூச்சி வகைகளில் பல இப்போது மாயமாகிவருகின்றன.
கனடாவின் யார்க் பல்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் ஹடில் எல்சயத் (Hadil Elsayed) என்னும் மாணவி, பாதுகாக்கப்பட்ட இரண்டு இடங்களில் பூச்சிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

அப்போது, 1990களில் இருந்ததைவிட, பூச்சிகளின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளதை அவர் கண்டறிந்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு கனடாவில் மட்டுமல்ல, பிரித்தானியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் பூச்சிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது தெரியவந்துள்ளது.

பூச்சிகளைப் பொருத்தவரை, அவை மீன்கள் போன்ற உயிரினங்களுக்கு உணவாக பயன்படுவதுடன், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், இறந்த விலங்குகள், தாவரங்கள் மட்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
ஆக, இந்த பூச்சிகள் அழிந்துவருவதால் பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் அதனால் பெரும் பாதிப்பு உள்ளது. மக்கள் அதிக தாவரங்களை வளர்ப்பது, பூச்சி மருந்துகள் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளால் பூச்சி இனங்கள் அழிந்துவருவதை தடுக்கலாம் என்கிறார்கள் எல்சயத் முதலான ஆய்வாளர்கள்.