பல்கலைக்கழக மாணவிக்கு பல மில்லியன் இழப்பீடு வழங்கிய அப்பிள் நிறுவனம்
அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் தகாத புகைப்படங்கள் கசிந்த விவகாரத்தில் பல மில்லியன் டொலர் இழப்பீட்டை அப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, பெகாட்ரன் நிறுவனம், அப்பிள் நிறுவனத்தின் உரிமம் பெற்று, அதன், ‘ஐபோன்’களை பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. அங்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தன் அப்பிள் ஐபோனை பழுது பார்க்க கொடுத்துள்ளார். அவரது ஐபோனை பெகாட்ரன் பொறியாளர்கள் இருவர் பழுது பார்த்துள்ளனர்.
அப்போது, அதில், மாணவியின் புகைப் படங்களும் வீடியோவும் இருந்தன. அவற்றை பார்த்ததுடன் நிற்காமல், பொறியாளர்கள் மாணவியின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். இதை, பேஸ்புக்கில் சக தோழிகள் பார்த்து, அந்த மாணவியிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, வழக்கறிஞர்களை நாடினார்.
அவர்கள், பெகாட்ரன் நிறுவனத்திடம், பல மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டனர். அதற்கு, அந்நிறுவனம் மறுத்து விட்டது. இதையடுத்து, அப்பிள் நிறுவனம், பெகாட்ரன் வாயிலாக அந்த மாணவிக்கு, பெருந்தொகை பணம் கொடுதது விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்ட தொகை வெளியிடப்படவில்லை எனினும், பல மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாணவியின் சட்டத்தரணிகள் 50 லட்சம் டொலர் (சுமார் 99 கோடி இலங்கை ரூபா) இழப்பீடு கோரியிருந்தமை குறிப்பிடத்தககது,