பல மாதங்களாக பிள்ளைகளின் சடலங்களுடன் காரில் சுற்றிய பெண்!
அமெரிக்காவில், பல மாதங்களாக இரு சிறு பிள்ளைகளின் சடலங்களுடன் காரில் பயணம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதான 33 வயது நிக்கோல் ஜோன்சன், பிள்ளைத் துன்புறுத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
குறித்த பெண் காரை வேகமாக ஓட்டியதற்காகக் பொலிஸ் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டபோது, 7 வயதுச் சிறுமி, 5 வயதுச் சிறுவன் ஆகியோரின் சடலங்கள் காரில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த இரு பிள்ளைகளும் ஜோன்சனின் சகோதரியின் பிள்ளைகள் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் 2019ஆம் ஆண்டு, சகோதரியால் தன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக ஜோன்சன் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்தச் சிறுமி சென்ற ஆண்டு மே மாதமே உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுவதுடன், விசாரணையின்போது, அந்தச் சிறுமியைப் பல முறை அடித்ததை ஜோன்சன் ஒப்புக்கொண்டார்.
எனினும் அந்தச் சிறுவனின் மரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன .