சட்ட உதவி கோரும் நால்வர் கொலை வழக்கு குற்றவாளி
கனடாவில் இஸ்லாமியர்கள் நால்வரை வாகனம் மோதவிட்டு கொலை செய்த இளைஞர், நீதிமன்றத்தில் சட்ட உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
லண்டனில் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது வாகனத்தால் மோதவிட்டு தாக்குதல் முன்னெடுத்த வழக்கில் கைதாகியுள்ள 20 வயது இளைஞர் வீடியோ இணைப்பு வழியாக நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டுள்ளார்.
வியாழக்கிழமை பகல் நடந்த இந்த நீதிமன்ற விசாரணையில், தமக்கு சட்ட உதவி அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
லண்டனை சேர்ந்த 20 வயதான Nathaniel Veltman, இஸ்லாமியர் குடும்பத்தினர் மீது முன்னெடுத்த தாக்குதல் தொடர்பில், 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தற்போது லண்டனை சேர்ந்த பிரபல சட்டத்தரணி Damon Hardy-ஐ தொடர்புகொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், தமக்கு சட்ட உதவிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், Damon Hardy-ன் தரப்பில் இருந்து மொபைல் இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த இலக்கத்தில் இனி Nathaniel Veltman தொடர்பு கொண்டு சட்ட உதவிகள் தொடர்பில் ஆலோசனை மேற்கொள்ளலாம்.
இதனிடையே, அடுத்த நீதிமன்ற விசாரணை ஜூன் 17ம் திகதிக்கு ஒப்புதல் அளிக்க கோரிய நிலையில், அரசு தரப்பில் ஜூன் 14 என தெரிவிக்கப்பட்டது, அதையே நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.