கனடாவின் தடுப்பூசிக் கொள்கையில் ஒரு மாற்றம்... தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த கனடா திட்டம்
ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின் தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை முதல் டோஸாக செலுத்தினால், அடுத்த டோஸ் தடுப்பூசியும் அதே நிறுவனத் தயாரிப்பாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு கருத்து நிலவி வந்த நிலையில், கனடா தற்போது தனது தடுப்பூசி கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஒருவருக்கு போடப்பட்ட முதல் டோஸ் தடுப்பூசி ஆஸ்ட்ராசெனகா நிறுவனத் தயாரிப்பான தடுப்பூசியாக இருந்தாலும், அவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக மொடெர்னா அல்லது பைசர் நிறுவனத் தடுப்பூசிகளை வழங்கலாம் என தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஆஸ்ட்ராசெனகா மற்றும் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசிகளை ஒரே நபருக்கு கலந்து கொடுப்பது பாதுகாப்பானது என்றும் திறன்வாய்ந்தது என்றும் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழு இந்த நெறிமுறையை வகுத்துள்ளது.
அதன்படி, இனி முதல் டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக மொடெர்னா அல்லது பைசர் நிறுவன தடுப்பூசி வழங்கலாம்.
கனடாவின் தலைமை பொது சுகாதார அலுவலரான Dr Theresa Tam இது குறித்துக் கூறும்போது, இப்படி தடுப்பூசிகளை கலந்து கொடுப்பது ஒன்றும் புதிதல்ல என்றும், ஏற்கனவே ப்ளூவுக்கான தடுப்பூசியையும், Hepatitis Aவுக்கான தடுப்பூசியையும் கலந்து கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.