பிரித்தானிய மருத்துவமனையில் தாக்குதல்; 5 பேர் காயம்; அதிர்ச்சியில் ஊழியர்கள்
பிரித்தானியா மெர்சிசைடு (Merseyside) பகுதியில் உள்ள நியூட்டன் கம்யூனிட்டி மருத்துவமனையில் (Newton Community Hospital) டிசம்பர் 30 மதியம் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
20 வயதுடைய இளைஞர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்து தனக்கு சிகிச்சைக்கான அனுமதி (Appointment) கோரியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவரை வெளியேறுமாறு மருத்துவமனை ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

வெறித்தனமான தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த இரும்புத் தடி (Crowbar) போன்ற ஆயுதத்தை எடுத்து அங்கிருந்த வரவேற்பு கவுண்ட்டரை அடித்து நொறுக்கினார்.
இந்த வெறித்தனமான தாக்குதலில், மருத்துவமனை காத்திருப்பு அறையில் (Waiting Room) இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

தாக்குதலின் போது அங்கிருந்த பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு பயந்து அலறியபடி வீதியில் ஓடி வந்த காட்சி அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.
அவர் அருகிலிருந்த ஒரு கடையில் புகுந்து உதவி கோரியதை அடுத்து, சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்
கைது செய்யப்பட்ட அந்த நபர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை மெர்சிசைடு போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் மீது கொலை முயற்சி (Wounding with intent), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

காயமடைந்த ஐந்து பேருக்கும் அதே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து மருத்துவமனை போலீசாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்கள் (Forensics) சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.