ஈராக் விமான நிலையம் மீது தாக்குதல்!
ஈராக் விமான நிலையம் மீது 'டிரோன்’ மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்லது ஈரான் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக குர்திஷ் மாகாணம் உள்ளது. அம் மாகாணத்தின் தலைநகர் எர்பிளில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. குறித்த விமான நிலையத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தங்கள் படையினரை நிலைநிறுத்தி வைத்துள்ளன.
ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், எர்பிள் விமான நிலையத்தை குறிவைத்து இன்று டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
‘டிரோன்’ மூலம் வெடிகுண்டுகள் விமான நிலையம் மீது வீசப்பட்டதாக கூறப்படும் அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் , இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக குர்திஷ் மாகாண பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.