பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் அதிரடி அறிவிப்பு
பாலஸ்தீனர்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான உக்கிர மோதல் இன்று ஏழாவது நாளாகத் தொடரும் நிலையில் ஹமாசின் ரொக்கட் தாக்குதல்களுக்கு மிகத் தீவிரமாக பதிலடி கொடுக்கப்படும் எனவும் நெதன்யாகு கூறினார்.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலிய விமானப்படைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகபாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராளிகள் இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி தொடர்ச்சியாக ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அதிகரித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இஸ்ரேல் - பாலஸ்தீன தரப்புக்களுக்கு சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று திங்கட்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்போது இரு தரப்பு மோதல் குறித்து பைடன் கவலை தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை சண்டை தொடங்கியதில் இருந்து காசாவில் குறைந்தது 41 சிறுவர்கள் உட்பட 148 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் தங்கள் தரப்பில் இறந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீனம் மீதான தாக்குதல் தேவையான வரை தொடரும் எனத் தெரிவித்தார்.
பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க சாத்தியமான அனைத்தும் செய்யப்படுவதாகவும் அவா் கூறினார். இந்த மோதலுக்கு நாங்கள் காரணமல்ல. எங்களைத் தாக்கும் நபர்களே காரணம் எனவும் அவா் குறிப்பிட்டார்.