ஆஸ்திரேலியா அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ; விரைவில் புதிய சட்டம்! ஆபத்தில் புலம்பெயர் பின்னணி கொண்ட பலர்
ஆஸ்திரேலியா குடிவரவுச் சட்டத்திலுள்ள Character test-நன்னடத்தை சோதனையின் அடிப்படையில், நாட்டிலுள்ள ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரித்து, அவர்களை நாடுகடத்துவதற்கு ஏதுவான சட்டத்திருத்தம் ஒன்றை வெகுவிரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடிவரவுச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாதவர், பாரதூரமான குற்றச்செயல் ஒன்றில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, குறைந்தது இரண்டு வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டாலோ, அல்லது 12 மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனையை அனுபவித்த அந்நபர் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் எனக் கருதப்பட்டாலோ, அவரது விசாவை நிராகரித்து நாடுகடத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுளது.
குறித்த விடயத்தில் பலரை நாடுகடத்துவதற்கு அரசுக்கு கூடுதல் அதிகாரம் தேவைப்படுவதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ள பின்னணியில், இந்த இறுக்கமான குடிவரவு சட்டத்திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிப்பதற்கு அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை Migration Amendment (Strengthening the Character Test) Bill என்ற இந்த சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் , அதற்கு போதிய ஆதரவு கிடைக்காததையடுத்து அது கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொண்டு, இது குறித்த சட்டமுன்வடிவை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக ஆஸ்திரேலிய அரசு மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளது.
இதேவேளை இப்புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் பாரதூரமான சட்டமாக கருதப்படும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இச்சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் நியூசிலாந்து நாட்டவர்கள் உட்பட புலம்பெயர் பின்னணி கொண்ட பலர் பாதிக்கப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.