தடுப்பு முகாமில் இருந்து அகதிகளை வெளியேற்ற ஆஸ்திரேலிய திட்டம்!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடைசிதொகுப்பு அகதிகளும் வரும் ஜூன் 30ம் திகதிக்குள் வெளியேற்ற ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, அலி எனும் பாகிஸ்தானிய அகதி நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தற்காலிகமாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து கனடாவில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவரைப்போல பிற அகதிகளும் ஆஸ்திரேலியாவுக்கு தற்காலிகமாக மாற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
நவுருத்தீவில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமை காலியாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டுமிட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த தீர்வுமின்றி வைக்கப்பட்டுள்ள அகதிகள்வெளியேற்றப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.
அதே சமயம், நவுருத்தீவில் எந்த அகதிகள் வைக்கப்படவில்லை என்றாலும் இம் முகாம் தொடர்ந்து கடல் கடந்த தடுப்பு முகாமாக செயல்படும் எனக் கூறப்படுகிறது. இம்முகாமிற்காக ஆண்டுக்கு 350 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் செலவழிக்கிறது.
புகலிடக்கோரிக்கையாளர் வள மையத்தின் கூற்றுப்படி, சமீப மாதங்களாக தொடர்ந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் நவுருத்தீவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடமாற்றப்பட்டு வருகின்றனர்.
ஹோட்டல் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுவேலைகளை தேட ஊக்குவிக்கப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான அகதிகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்குமா என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.