கனடாவில் 220 கோடி ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை பெற்ற வங்கி ஊழியர்!
கனடாவில் கடந்த 2022ல் வங்கி ஊழியர் ஒருவர் ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகையாக சுமார் 220 கோடி அளவுக்கு பெற்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அக் காலகட்டத்தில் வட்டி விகித உயர்வு காரணமாக நுகர்வோர் செலவினங்களை குறைக்க வேண்டும் என பாங்க் ஆஃப் கனடா முயற்சி முன்னெடுத்து வந்தது. இந்த நிலையில், கனடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு திரட்டிய தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய கனடா வங்கி ஊழியர் ஒருவர் ஊக்கத்தொகையாக சுமார் 20.2 மில்லியன் கனேடிய டொலர் தொகையை பெற்றுள்ளதுடன், ஊதிய உயர்வாக 6.5 மில்லியன் கனேடிய டொலர் பெற்றுள்ளார்.
கடும் விமர்சனம்
இது 2021ல் அவர் பெற்ற தொகையை விட 13 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, பாங்க் ஆஃப் கனடா ஊழியர்களில் 80 சதவீதம் பேர்கள் 2022ல் ஊக்கத்தொகை அல்லது ஊதிய உயர்வு பெற்றுள்ளனர்.
பொதுவாக கனேடிய மக்கள் மளிகை பொருட்கள், பெட்ரோல் அல்லது சொந்தமாக ஒரு வீடு என்ற கனவுடன் போராடி வந்த போது, வங்கி ஊழியர்கள் ஊக்கத்தொகை மற்றும் ஊதிய உயர்வுடன் செழிப்பாக இருந்தனர் என கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வு என்பது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், வங்கி ஊழியர்கள் பெருந்தொகை ஊக்கத்தொகை பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆஃப் கனடா ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 11,000 டொலர் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் சராசரியாக 3,400 டொலர் அளவுக்கு ஊதிய உயர்வும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2,250 பாங்க் ஆஃப் கனடா ஊழியர்களில் 1,095 பேர்கள் 2022ல் 6 இலக்க ஊதியம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பாங்க் ஆஃப் கனடா தவறியதாகவே கண்டறியப்பட்டுள்ளது.