வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: பேங்க் ஆஃப் கனடா அதிரடி அறிவிப்பு!
கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, தனது கொள்கை வட்டி விகிதத்தை (Key Policy Interest Rate) தொடர்ந்து நான்காவது முறையாக 2.25 சதவீதமாகவே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
குறுகிய காலத்தில் பணவீக்கம் (Inflation) அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையையும் வங்கி விடுத்துள்ளது.
தற்போது எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதால், பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3 சதவீதத்தை எட்டும் என்று வங்கி கணித்துள்ளது.

எனினும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது மீண்டும் வங்கியின் இலக்கான 2 சதவீதத்திற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய வங்கி ஆளுநர் டிஃப் மேக்லம், "சர்வதேச எரிசக்தி விலையேற்றம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு கனடியர்களைப் பொருளாதார ரீதியாக நெருக்குதலுக்கு உள்ளாக்கி வருகிறது," என்று தெரிவித்தார்.
கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறித்த கணிப்புகளில் பெரிய மாற்றமில்லை. அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக வரிகள் (Tariffs) மற்றும் ஈரான் போர் போன்ற உலகளாவிய சூழல்கள் கனடாவின் ஏற்றுமதி மற்றும் வணிக முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து, அது மற்ற பொருட்களின் விலையிலும் எதிரொலித்தால், வட்டி விகிதங்கள் அடுத்தடுத்து உயர்த்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து, அது கனடாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தால், வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.