ஏர் கனடா பயணிகள் விமானத்திற்கு 2 வார காலம் தடை விதித்த பிரபல நாடு
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கனடாவின் வான்கூவரில் இருந்து வரும் ஏர் கனடா பயணிகள் விமானங்களுக்கு ஹொங்ஹொங் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது.
குறித்த தகவலை ஹொங்ஹொங்கின் சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. அக்டோபர் 13ல் வான்கூவரில் இருந்து ஹொங்ஹொங்கிற்கு சென்ற ஏர் கனடா விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு வருகை சோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதோடு அந்த விமானத்தில் இருந்த மற்றொரு பயணி நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றவும் தவறிவிட்டார். இதன் காரணமாக, அக்டோபர் 16 முதல் 29 வரை ஏர் கனடாவால் இயக்கப்படும் வான்கூவரில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை தரையிறக்க ஹொங்ஹொங்கின் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
ஆனால் சரக்கு விமானங்கள் மற்றும் ரொறன்ரோவில் இருந்து இயக்கப்படும் ஏர் கனடா விமானங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட இந்த நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றே ஏர் கனடா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட விமான நேரத்திற்கும் மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் பதிவு செய்ய முடியாத எவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் ஏர் கனடா உறுதியளித்துள்ளது.
ஹொங்ஹொங்கில் வெள்ளிக்கிழமை மட்டும் வேறுநாடுகளில் இருந்து வந்தவர்களில் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் கனடா, இந்தியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளும் அடக்கம்.
அக்டோபர் 1 முதல் 14 வரையான காலகட்டத்தில் மொத்தம் 59 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹொங்ஹொங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.