பல லட்சம் மதிப்பிலான காரை நாசம் செய்த கரடி... அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவில் கரடி ஒன்று பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காருக்குள் புகுந்து, ஒரே இரவில் அந்த காரின் உட்பகுதி முழுவதையும் கடித்து குதறி ஒன்றுமில்லாமல் ஆக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெனின்சுலா தீபகற்பத்தைச் சேர்ந்தவர் விக்கி கான்ஸ்டன்ட்டி (49). இவர் கடந்த வாரம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சுற்றி பார்க்க தனது குடும்பத்தினருடன் வந்தார்.
கலிஃபோர்னியாவில் பல இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், நேற்று முன்தினம் அங்குள்ள அர்னால்டு நகருக்கு சென்றனர். பின்னர் இரவில் அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் தங்குவதற்காக அவர்கள் சென்றுள்ளனர்.
பின்னர், உல்லாச விடுதிக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு அவர்கள் உள்ளே சென்றுவிட்டனர். பொதுவாக, அர்னால்டு நகரம் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் கரடி, காட்டெருமை போன்ற விலங்குகள் நகருக்குள் வருவது வழக்கம்.
இது உள்ளூர்காரர்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட மாட்டார்கள். அதேபோல, தங்கள் வாகனங்களையும் வெளியே விட மாட்டார்கள். அப்படி வெளியே விட்டால், அந்த வாகனங்களை வனவிலங்குகள் சேதப்படுத்திவிடும்.
ஆனால், இந்த விஷயம் தெரியாத விக்கி கான்ஸ்டன்ட்டி குடும்பத்தினர், உல்லாச விடுதிக்கு உள்ளே இடம் இருந்தும், சோம்பேறித் தனத்தில் சாலையோரத்திலேயே ரூ.80 லட்சத்துக்கும் மேலான சொகுசு காரை நிறுத்திவிட்டு சென்றனர்.
மேலும், காரின் கதவுகளை ஞாபக மறதியில் பூட்டாமலும் சென்றுவிட்டனர். உல்லாச விடுதி ஊழியர்கள் பல முறை கூறியும் அவர்கள் காரை உள்ளே நிறுத்தவில்லை.
இந்த நிலையில், அவர்கள் உல்லாச விடுதிக்கு சென்ற சில மணிநேரங்களிலேயே அந்த வழியாக காட்டுக் கரடி ஒன்று அவர்களின் காரின் கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டது. காரின் கதவும் தானாக 'லாக்' ஆகிவிட்டது.
இதனால் கரடியால் வெளியே வர முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கரடி, பயத்தில் காரின் உள்ளே இருந்த இருக்கைகள், கியர், ஆக்சிலேட்டர், பிரேக் போன்ற அனைத்துக் கருவிகளையும் கடித்து குதறி துவம்சம் செய்தது. இது ஒருபுறம் இருக்க காரின் 'ஹாரன்', அபாய ஒலி அனைத்தும் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்துள்ளது.
ஆனால் உல்லாச விடுதியில் உள்ளே இருந்த விக்கி குடும்பத்தினருக்கு இது கேட்கவில்லை. இந்நிலையில், அதிகாலையில் ஜன்னல் வழியாக விக்கி தனது காரை பார்த்துள்ளார். அப்போதுதான், காரில் உள்ள இன்டிக்கேட்டர் விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
அப்போதுதான், காரின் கதவுகளை பூட்டவில்லை என்பது அவரது நினைவுக்கு வந்தது. இதையடுத்து, சாவியை எடுத்து கதவுகளை திறந்துள்ளார். கார் கதவு திறந்ததுதான் தாமதம். உடனே உள்ளுக்குள் இருந்த கரடி விட்டால் போதும் என வெளியே எகிறி குதித்து ஓடியது.
அதன் பின்னர், அவர்கள் காரை திறந்து பார்த்த போது உள்ளே ஒன்றையும் விடாமல் கரடி கடித்து நாசம் செய்திருப்பதை கண்டனர். அந்த வண்டியை இனி உபயோகப்படுத்தவே முடியாத அளவுக்கு அந்தக் கரடி துவம்சம் செய்து வைத்துள்ளது.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.