வாக்குவாதத்தின் இடையே துப்பாக்கியால் சுட்ட ரொறன்ரோ பொலிஸ்: ஆபத்தான நிலையில் ஒருவர்
ரொறன்ரோவில் வாக்குவாதத்தின் இடையே பொலிசாரால் நபர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை மாலை நேரம் டேவிஸ்வில்லே அவென்யூவுக்கு தெற்கே 1815 யோங் தெருவில் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு பொலிசாரும் அவசர உதவிக்குழுவினரும் விரைந்துள்ளனர். இந்த நிலையில், பொலிசார் கத்தியுடன் காணப்பட்ட அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் ஒருகட்டத்தில் அது வாக்குவாதமாக மாறவே, திடீரென்று பொலிசார் ஒருவர் துப்பாக்கியால் அந்த நபரை சுட்டுள்ளார்.
ரத்தவெள்ளத்தில் சரிந்த அந்த நபரை உடனடியாக மீட்டு முதலுதவிக்கு பின்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அந்த நபர் இதுவரை ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் சிகிச்சையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் தாக்கியதாக தகவல்கள் வந்ததாக பொலிசார் ஆரம்பத்தில் தெரிவித்தனர். மேலும் அந்த நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்தே 911 இலக்கத்திற்கு அழைப்பு சென்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணை குழு விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.