ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் 50 வயது கியூபெக் பெண்ணின் குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரம்
கியூபெக்கில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 50 வயது கடந்த பெண் ஒருவர் ரத்தக்கட்டிகள் காரணமாக மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு பக்கவிளைவுகள் மிக மிக குறைவு என்ற போதிலும், அரிதான ரத்தக்கட்டிகள் போன்ற சிக்கலுக்கும் வாய்ப்புள்ளதை கியூபெக் பிராந்திய நிர்வாகம் அறிந்துள்ளது என பொது சுகாதார இயக்குனர் டாக்டர் ஹொராசியோ அருடா செவ்வாயன்று ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இதுவரை கியூபெக் பிராந்தியத்தில் 400,000 மக்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், நால்வருக்கு கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் (Christian Dube) கூறியுள்ளார்.
தற்போது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியானது கியூபெக் பிராந்தியத்தில் 45 முதல் 79 வயதுடைய மக்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது, அதில் மாறுதல் எதுவும் கொண்டுவரும் திட்டமில்லை என டாக்டர் அருடா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த இரு தினங்களாக கியூபெக் பிராந்தியத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவு எனவும்,
கடந்த 24 மணி நேரத்தில் 899 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 14 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.