கனடாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 28 பேருக்கு அபூர்வ வகை இரத்தக்கட்டிகள்
கனடாவில் இதுவரை 2.3 மில்லியன் மக்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 28 பேருக்கு அந்த தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளான இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அலுவலரான Dr. Howard Njoo கூறும்போது, அந்த 28 பேரில் 18 பேருக்கு இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 10 பேர் ஆய்வக முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்படும்போது, Vaccine-induced thrombotic thrombocytopenia (VITT) என்று அழைக்கப்படும் இந்த இரத்தக்கட்டிகள் உருவாகும் நிலையில், கூடவே சிலருக்கு இரத்தம் உறைய உதவும் இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கையும் குறைந்ததால் பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த இரத்தக்கட்டிகள் தடுப்பூசி போட்டு 4 முதல் 28 நாட்களுக்குள் உருவாகின்றன என ஒன்ராறியோ அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, ஏற்கனவே பலருக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், இந்த மாத இறுதிவாக்கில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை கனடாவில் இந்த அபூர்வ வகை இரத்தக்கட்டிகளால் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். இப்படி ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் சில கனேடிய மாகாணங்கள் தடுப்பூசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
அதே நேரத்தில், இன்னும் அதிக தடுப்பு மருந்துகளும் வாங்கப்பட்டும் வருகின்றன.
இன்னொரு பக்கம், ஒரு டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டபின், இரண்டாவது டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடுவதற்கு பதில், பைசர் நிறுவனத்தின் தயாரிப்பான தடுப்பூசி போடும் திட்டம் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.