இரண்டாக பிளந்த படகு; 150 பேர் பரிதாபமாக பலி
நைஜீரியாவில் பயணிகள் படகு ஒன்று இரண்டாக பிளந்ததில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இதுவரை 5 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதுடன், 40 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள நைஜர் நதியில் புதன்கிழமை சுமார் 200 பேர் படகில் பயணித்துள்ளனர். குறித்த படகு மத்திய நைஜர் மாநிலத்தில் இருந்து வடமேற்கு கெப்பி மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென்று படகு இரண்டாக பிளந்ததுடன், ஆற்றில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் சுமார் 80 பேர் மட்டுமே பயணிக்க போதுமான படகில் 200 பேர் வரை பயணித்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், 150 பேர் என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் தகவல் இல்லை.
படகில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் தங்க சுரங்க தொழிலாளர்கள் எனவும், அவர்கள் சுரங்கத்தில் இருந்து மணல் மூட்டைகளுடன் பயணப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் சடலங்கள் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.