நார்வே கடற்கரையில் ஒதுங்கிய குழந்தையின் சடலம்; நெஞ்சை உலுக்கும் பின்னனி
நார்வே கடற்கரையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரை ஒதுங்கிய 15 மாத குழந்தையின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆர்டின் (Artin)என்ற அந்த குழந்தை, படகில் தனது குடும்பத்தாருடன் கடந்த ஆண்டு அக்டோபரில் சென்றபோது கடலில் மூழ்கி உயிர் விட்டது தெரிய வந்துள்ளது.
அந்த குழந்தையின் குர்திஷ் இரானிய குடும்பத்து உறவினர்கள், பிரான்ஸில் இருந்து பிரிட்டனுக்கு வருகை தர முற்பட்டுள்ளனர். அந்த குழந்தைக்கு என்ன ஆனது என்ற குழப்பமும் கவலையும் நிறைந்தவர்களாக அவர்கள் ஆர்டின்(Artin) குறித்து விசாரித்தனர். இந்த நிலையில் தற்போது அந்த குழந்தையின் சடலம், இரானுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நார்வே காவல்துறையினர் திங்கட்கிழமை உறுதிப்படுத்தினர். அத்துடன் குழந்தையின் சடலத்துடன் இரண்டு அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நார்வேயில் குழந்தை காணாமல் போனது தொடர்பான புகார்கள் ஏதுமில்லை. மேலும், எங்களை எந்த குடும்பமும் தொடர்பு கொண்டு பேசவில்லை,” என்று நார்வே காவல்துறை புலனாய்வுப்பிரிவு தலைமை அதிகாரி கமில்லா ட்ஜெல்லி வாகே (Camilla Tjelli Wake) பிபிசியிடம் தெரிவித்தார். குழந்தை ஆர்டின் (Artin)அணிந்திருந்த நீல நிற உடை நார்வே ஆடை தயாரிப்பு நிறுவனங்களுடையது இல்லை என்பதால் அதை வைத்தே அந்த குழந்தை நார்வே நாட்டைச் சேர்ந்ததாக இருக்காது என முடிவுக்கு வந்தோம், என்றும் அவர் கூறினார்.
அதன்பின்னர் குழந்தையின் மரபணு மாதிரியும் அதன் குடும்ப உறுப்பினர்களின் மரபணு மாதிரியும் பரிசோதிக்கப்பட்டதில் இறந்து போனது ஆர்டின்தான் (Artin) என உறுதிப்படுத்தினோம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இதற்காக ஓஸ்லோ பல்கலைக்கழகத்தின் தடயவியல் துறை நிபுணர்கள் அழைக்கப்பட்டு இரு தரப்பு மரபணு மாதிரிகளை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்தனர் என காவல்துறை செய்திக்குறிப்பிலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, ஆங்கில கால்வாய் பகுதியில் ரசூல் இரான் நெஜாத் (35), மொஹம்மத் பனாஹி (35), அனிடா (9), ஆர்மின் (6) உள்ளிட்டோர் பயணம் செய்த படகு கடலில் மூழ்கியது. அந்த குடும்பத்தினர் மேற்கு இரானை சேர்ந்தவர்கள் என்றும் இராக்கை ஒட்டிய எல்லை பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
உயிர் தப்பிய மேலும் 15 குடியேறிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அந்த படகு மூழ்கிய சம்பவம் தொடர்பான விசாரணையை துன்ரிக் காவல்துறையினர் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், குழந்தை ஆர்டின் தாயின் சகோதரி நிஹாயத்தின் இருப்பிடம் அறிந்து அவரை நார்வே காவல்துறையினர் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நாடுவிட்டு நாடு செல்கையில் சிறுவன் ஆர்டின் (Artin)உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலை கொள்ளச்செய்துள்ளது.