கனேடிய நகரமொன்றில் தண்ணீரில் கிருமிகள்: ஆறு நாட்களுக்கு பின்னரும் தொடரும் எச்சரிக்கை
மொன்றியல் நகரின் சில பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கிருமிகள் இருப்பது தெரியவந்த நிலையில், அது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரின் Dollard-des-Ormeaux (DDO) மற்றும் Pierrefonds ஆகிய பகுதிகளுக்கு தண்ணீரில் கிருமிகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், ஆறு நாட்கள் ஆன நிலையிலும் அந்த எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, இன்னமும் அந்த எச்சரிக்கை தொடர்கிறது.
Dollard-Des-Ormeauxஇலுள்ள தண்ணீர் சேகரிப்பு மையத்தில் அழுக்கை அகற்றும் பணியும், பலத்த மழையும் சேர்ந்து கண்ணுக்கு தெரியாத கீறல் வழியாக கிருமிகளை வெளியேற்றியதால் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
தண்ணீர் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் இடத்தில் enterococcus என்னும் கிருமிகள் இருப்பதை ஆய்வக சோதனைகள் உறுதிசெய்துள்ளன.
இவ்வகை கிருமிகள் மனிதனின் குடலில் காணப்படக்கூடியவைதான் என்றாலும், சிலருக்கு அவை நோய்களை உண்டாக்கக்கூடும்.
கடந்த வெள்ளிக்கிழமை தண்ணீரில் இருக்கும் பிரச்சினையை கண்டுபிடித்து, அதை சரி செய்தும் விட்டார்கள். இருந்தாலும், 24 மணி நேரத்துக்கு ஒரு முறை தொடர்ச்சியாக ஆய்வக பரிசோதனைகள் செய்து, தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தண்ணீரில் பிரச்சினை இல்லை என்றால் மட்டுமே அந்த தண்ணீரை மக்கள் பயன்பாட்டுக்கு அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவேதான், ஆறு நாட்களாகியும் தண்ணீர் குறித்த எச்சரிக்கை இன்னமும் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.