இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ; கனடா நாட்டவர் கைது
இந்தியாவின் உத்தர பிரதேசம் வாரணாசி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கனடாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக கோம்தி பகுதி காவல் உதவி ஆணையாளர் ஆகாஷ் படேல் கூறியதாவது;
ஏப்.26ம் திகதி வாரணாசியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இருந்த ஒரு பயணி, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.
உடனடியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகள், அவர்களின் உடமைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன.
அதன் பின்னரே அது புரளி என்பது தெரிய வந்தது. இந்த புரளியைக் கூறிய கனடாவைச் சேர்ந்த நிஷாந்த் கைது செய்யப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்.
விமான நிலைய நடவடிக்கைகளை தாமதப்படுத்த அவர் தவறான தகவலை அளித்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதியப்பட்டு, கனடா நாட்டு தூதரகத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.