நிலச்சரிவால் 'பிரிட்ஜ்' க்குள் ஓடி ஒளிந்த சிறுவன்; 20 மணி நேரத்திற்கு பின் மீட்பு படையினர் கண்ட காட்சி!
பிலிப்பைன்சில் நிலச்சரிவால் பிரிட்ஜூக்குள் சென்று ஒளிந்துகொண்ட சிறுவன் 20 மணி நேரத்திற்கு பிறகு நதிக்கரை அருகே உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்சின் லெய்டு மாகாணத்தை தாக்கிய மெகி புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவு ஏற்பட்டதனால் ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் என்பன இடிந்து விழுந்தன.
இந்த நிலையில் அங்கு உள்ள பேபே நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுவனான சி.ஜே. ஜாஸ்மி குளிர்சாதன பெட்டிக்குள் சென்று ஒளிந்துகொண்டான்.
அதன் பின்னர் அங்கு நடைபெற்ற மீட்பு பணியின் போது நதிக்கரை அருகே குளிர்சாதன பெட்டியில் சிறுவன் இருப்பதை மீட்பு பணி வீரர்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக குளிர்சாதன பெட்டிக்குள் இருந்த சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
மீட்பு படையினரிடம்சிறுவன் முதலில் பசிக்கிறது என கூறிய நிலையில் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தற்போது சிறுவன் பத்திரமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இந்த நிலச்சரிவில் சிறுவனின் தாய் மற்றும் சகோதரனை காணவில்லை. சிறுவனின் தந்தை நிலச்சரிவில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு காரணமாக இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் மெகி புயல் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாகாணத்தைவிட்டு இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன.
