கனடாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன.
இந்த பின்னணியில், கனடா அரசு 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கனடா கலாச்சாரத் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்ததாவது, சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடுக்கும் சட்டம் அமல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், “டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம்” என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படவுள்ளதாகவும், சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த அமைப்பிடம் விளக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வயது சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை நடவடிக்கைகள் அவசியம் எனவும், சமூக ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் மார்க் மில்லர் வலியுறுத்தினார்.