பிரேசிலில் கர்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு இடைக்கால தடை
பிரேசில் நாட்டில் கர்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் தற்போது கொரோனாவை தடுக்கும் தடுப்பூசிகளாக அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவே காரணம் என கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த பெண் 23 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் பிரேசிலில் வேறு எந்த கர்ப்பிணி பெண்களுக்கும் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை.
இருப்பினும் இது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பதால், பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.