பிரேசிலில் ஒலிம்பிக் சின்னத்தால் ஒளிரூட்ட மீட்பர் இயேசு சிலை!
ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் பிரேசிலில் உள்ள மீட்பர் இயேசு சிலை ஒலிம்பிக் சின்னத்தால் ஒளிரூட்டப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி துவங்க உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டியானது, கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறுகிறது.
இந்த ஆண்டும் கொரோனாவின் 2வது அலை தற்போது பரவி வந்தாலும், ஒலிம்பிக் போட்டிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியானது, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜேனிரோவில் நடைபெற்றது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், ரியோ டி ஜேனிரோவில் உள்ள புகழ்பெற்ற மீட்பர் இயேசு சிலை வண்ணமயமான எல்.இ.டி. புரொஜெக்டர்களால் ஒளிரூட்டப்பட்டது.
இதனைக் கொண்டு மீட்பர் இயேசு சிலையின் மீது ஒலிம்பிக் சின்னம் மற்றும் போர்ச்சுகீசிய மொழியில் ஒழுக்கம், உறுதி, மரியாதை, கவனம் மற்றும் தைரியம் ஆகிய வார்த்தைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
1931 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட மீட்பர் இயேசு சிலையானது 98 அடி(30 மீட்டர்) உயரம் கொண்டது ஆகும். இந்த சிலை நிறுவப்பட்டு 90 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், தற்போது அந்த சிலையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.