பிரித்தானியாவில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி
உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், தடுப்பூசி போடும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு வயதினருக்கு பல கட்டங்களாக தடுப்பூசி போடப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அங்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5-ல் 4 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்கான வயதைக் குறைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பிரித்தானியாவில் இனி 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.