பிரித்தானியாவில் வேகமெடுத்துள்ள டெல்டா வைரஸ்..பொதுமக்கள் அச்சம்
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது.
முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 18 கோடியே 60 லட்சத்து 4 ஆயிரத்து 716 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
அவர்களில் 40 லட்சத்து 20 ஆயிரத்து 491 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர். கொரோனா பரவத்தொடங்கி 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் குறையாமலேயே உள்ளது. கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரசின் டெல்டா ரகம் தற்போது தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் பரவி வருகிறது.
தற்போது உலகத்தையே இந்த டெல்டா ரகம் அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வாரம் 54 ஆயிரத்து 268 புதிய புதிய நோயாளிகள் உருவாக்கியுள்ளனர் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
வைரஸின் பரவும் தன்மை அதிகமாகியுள்ளதே தவிர மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று பிரித்தானியா சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஜெனி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் டெல்டா ரகம் அதிகரித்துவரும் அதே நிலையில் டெல்டா பிளஸ் ரகம் குறைவாகவே காணப்படுகிறது. வெறும் 44 பேர் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா பிளஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.