பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு அச்சம் ; ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் கண்டறிவு
பிரித்தானியாவின் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய இணைய கேபிள்கள் (Internet Cables) மற்றும் எரிவாயு குழாய்களை (Pipelines) இலக்கு வைத்து ரஷ்யாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இந்த "தீய" நடவடிக்கையை முறியடிக்கப் பிரித்தானியாவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக நிலைநிறுத்தப்பட்டன.
ரஷ்யாவின் இந்த உளவு முயற்சியை நேரடியாகச் சாடிய ஹீலி, "நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.
எமது உட்கட்டமைப்புகளைச் சேதப்படுத்த முயன்றால் அதன் விளைவுகள் பாரியதாக இருக்கும்," என எச்சரித்தார். பிரித்தானியாவின் தரவுப் பரிமாற்றத்தில் 90% இந்த கடல்சார் கேபிள்கள் மூலமே நடைபெறுகின்றன.
அதேபோல், பிரித்தானியாவிற்குத் தேவையான 77% எரிவாயு நோர்வேயிலிருந்து வரும் கடல் குழாய்கள் மூலமே விநியோகிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், ரஷ்யாவின் 'GUGI' எனப்படும் மிக இரகசியமான ஆழ்கடல் ஆராய்ச்சிப் பிரிவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த உளவு வேலையில் ஈடுபட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.