ஆப்கானில் சிக்கிய பிரித்தானிய மாணவர்; விடுத்த கண்ணீர் கோரிக்கை!
விடுமுறைக்காக ஆப்கானிஸ்தான் சென்ற பிரித்தானிய மாணவர் ஒருவர் காபூல் நகரத்தில் நாடு திரும்பமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ள நிலையில் , எப்படியாவது வீட்டுக்கு உயிருடன் சென்றுவிடவேண்டும் என வேண்டிக்கொண்டு இருப்பதாக முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரத்தைச் சேர்ந்த மாணவர் மைல்ஸ் ரௌட்லெட்ஜ் (Miles Routledge), வயது 21. Loughborough பல்கலைக்கழக மாணவரான இவர், கடந்த வாரம் 'most dangerous countries to visit' என கூகிளில் தேடி பிடித்து, வேண்டுமென்றே ஆப்கானிஸ்தானுக்கு விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.
தாலிபான் படையினர் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானை படிப்படியாக கைப்பற்றிவந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கம் தங்கள் மக்களை உடனடியாக நாடு திரும்பும்படி எச்சரித்தனர். இந்நிலையில் , நாம் தலைநகர் காபூலில் தானே இருக்கிறோம், தாலிபான்கள் அங்கு வருவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகலாம் என ரௌட்லெட்ஜ் (Miles Routledge)சற்று மெத்தனமாக இருந்துவிட்டார்.
ஆனால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. தாலிபான் படையினர் காபூலையும் பிடித்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர். இந்நிலையில், ரௌட்லெட்ஜ் (Miles Routledge)நாடு திரும்ப முடியாமல் அங்கேயே மாட்டிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது நிலைமையை கூறி பேஸ்புக் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், காபூலில் விமான நிலையத்திற்கு செல்ல, தலையில் புர்கா அணிந்து செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாகவும், இருப்பினும் நிலையத்தில் கலவரமாக காணப்பட்டதால் அங்கு செல்லமுடியாமல் மீண்டும் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
அத்துடன் தற்போது, காபூலில் இருக்கும் பிரித்தானிய தூதரகத்திற்கு தொடர்பு கொண்டுள்ள மைல்ஸ் ரௌட்லெட்ஜ் (Miles Routledge), எப்படியாவது வீட்டுக்கு உயிருடன் சென்றுவிடவேண்டும் என தாம் வேண்டிக்கொண்டுள்ளதாகவும் அவர் பதிவுட்டுள்ளதாக கூறப்படுகின்றது.