லண்டன் நகரில் ஹோட்டலாக மாறும் பழமைவாய்ந்த உயரமான கோபுரம்!
பிரித்தானிய தலைநகர் லண்டன் "வெஸ்ட் எண்ட்" பகுதியில் உள்ள பழமை வாய்ந்த "பிடி டவர்" (British Telecommunications Tower) கோபுரம் ஹோட்டலாக மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
620 அடி உயரமும், மத்திய பகுதி 581 அடிகள் உயரம் கொண்ட இந்த கோபுரத்தை 1965ல் அப்போதைய பிரதமர் ஹெரால்ட் வில்சன் திறந்து வைத்தார்.
இந்த கோபுரத்தை தொடக்கத்தில் தொலைக்காட்சி சிக்னல்கள் அனுப்ப பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பிடி டவரின் உரிமையாளராக இருந்த பிடி குழுமம் (BT Group), அதனை எம்சிஆர் ஹோட்டல்கள் (MCR Hotels) குழுமத்திற்கு $347 மில்லியனுக்கு விற்பனை செய்துவிட்டது.
எம்சிஆர் ஹோட்டல்கள் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டைலர் மோர்ஸ் (Tyler Morse), "இந்த பழமையான கட்டிடத்தை அதன் பெருமை குறையாமல் மேம்படுத்தி தலைமுறையினருக்கு சுகமான அனுபவத்தை வழங்கும் முயற்சியில் மகிழ்ச்சியாக உள்ளோம்" என கூறினார்.
மேலும், பல ஆண்டுகளாக இதனை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்த முடியாமல் இருந்து வந்த நிலையில், அவர்களின் நேரிடையான பயன்பாட்டிற்கு இது வருவது உற்சாகம் அளிக்கும் செய்தியாக லண்டன் "வெஸ்ட் எண்ட்" பகுதியில் பார்க்கப்படுகிறது.