வாகனத்துடன் கொளுத்தப்பட்ட நபர்: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லாங்லி பகுதியில் வாகனத்துடன் கருகிய நிலையில் மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
லாங்லி பகுதியில் கடந்த வாரம் மொத்தமாக எரிந்த வாகனத்தில் இருந்து கருகிய நிலையில் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொலிசார், ஜூலை 20ம் திகதி சுமார் 7 மணியளவில் வாகனம் ஒன்று குளுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அந்த வாகனத்தின் உள்ளே கருகிய நிலையில் சடலம் ஒன்றையும் மீட்டனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், சடலமாக மீட்கப்பட்டவர் 36 வயதான கிறிஸ்டோபர் ராய் எனவும், அவர் வான்கூவர் பகுதியை சார்ந்தவர்வர் எனவும் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், ராய் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் எனவும், முக்கிய கும்பல் ஒன்றுடன் தொடர்புடையவர் எனவும், இவரது மரணம் திட்டமிட்ட கொலை எனவும் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி தாம் கொல்லப்படலாம் என ராய் தெரிந்து வைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், பொலிசாருக்கு உதவ வேண்டும் என தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.