சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: அற்றில் கவிழ்ந்து விபத்து! 10 பேர் பலி
பெரு நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் ஹூவான்கோ நகரில் இருந்து தலைநகரான லிமாவுக்கு அதிகாலை ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அதில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அங்குள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள ரிமாக் ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பேருந்துக்குள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.