2022-க்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும்; நம்பிக்கை வெளியிட்ட சவுமியா சுவாமிநாதன்
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து 2022 இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுமியா சுவாமிநாதன்,
கொரோனா பரவலை தடுப்பது தொடா்பான விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட தொடங்கிவிட்டனர். கொரோனா முதல், 2வது அலைகளில் தடுப்பூசி குறைந்த அளவு போடப்பட்ட பகுதிகள், எளிதில் பாதிக்கப்படக் கூடிய மக்கள் போன்ற காரணங்களால் அடுத்த சில மாதங்களுக்கு தொற்று பரவலில் உயர்வு, தாழ்வுகள் காணப்படும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் கொரோனா மூன்றாவது அலை பரவும்போது, சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம். ஆனால், அது குறித்து கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், 18 வயதை கடந்தவா்களுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளும், சிறுவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவுதான்.
கடந்த மாதங்களில் இந்தியாவில் அதிவேக வைரஸ் பரவல் மற்றும் உச்ச நிலைமை தற்போது இல்லை எனவும் கூறிய அவர், இந்தியாவைப் பொறுத்த வரை அதன் பரப்பளவு மற்றும் பல்வேறு வகையான மக்களால், நோயெதிர்ப்பு திறன் வெவ்வேறு அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் வைரஸ் பாதிப்பு ஏற்றத்தாழ்வுகளுடன் தொடரலாம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால், உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் 2022 இறுதியில் நாம் அதனை அடைவோம் எனவும் நம்புகிறேன். பெரியவர்களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே இறந்துள்ளனர். இருந்தாலும், குழந்தைகள் அட்மிஷன் பிரிவு மற்றும் குழந்தைகள் ஐ.சி.யூக்களை மருத்துவமனைகள் தயார் செய்வது நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு விரைவில் ஒப்புதல் வழங்க இருப்பதாகவும், தடுப்பூசி தொடர்பான கூடுதல் தகவல்களை நிபுணர்கள் குழு பெற்றுள்ள நிலையில், சோதனைக்கு பிறகு சில வாரங்களில் ஒப்புதல் வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.