கனடாவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து மிரட்டல் விடுத்த ஆயுததாரிகள்: கதறிய குடும்பம்
கனடாவின் கல்கரியில் ஆயுததாரிகள் இருவர் குடியிருப்பு ஒன்றில் புகுந்து மிரட்டி பணம் நகைகள் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், மிரட்டல் விடுத்த இருவரும் தவறான முகவரியை குறிவைத்ததாகவே தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிறன்று மதியம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் குடியிருப்பு ஒன்றில் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கேட்டு மிரட்டியுள்ளனர்.
மட்டுமின்றி, அதில் ஒருவன் பெரியவர்கள் இருவரின் கைகளையும் கட்டி உட்காரவைத்துள்ளான். பிள்ளைகள் நால்வரையும் இன்னொரு அறையில் வைத்து பூட்டியுள்ளான்.
இந்த நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்ட அந்த குடும்ப தலைவர், 911 இலக்கத்தில் அழைத்துள்ளதுடன், அந்த ஆயுததாரிகள் பேசுவதை ரகசியமாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஆயுததாரிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் நான்கு பிள்ளைகள் உட்பட ஆறு பேரையும் பொலிசார் மீட்டுள்ளனர். பொலிசாரின் துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள அந்த குடும்பம், மிக மோசமான சூழலில் இருந்து தப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வீடு புகுந்து மிரட்டல் விடுத்த இருவரையும் அடையாளம் கண்டுள்ள பொலிசார், அவர்கள் மீது தலா 10 பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர். கைதான ஒருவர் மீது இன்னொரு வழக்கு தொடர்பில் கனடா அளவில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.