உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய அழைப்பு
பிரித்தானிய அரசாங்கம் அண்மையில் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் மேற்கொண்டுள்ள தடையானது, உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்று அந்த நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்தால், சுமார் 45 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு உள்ளாகக்கூடும் என உலக உணவுத் திட்டம் (WFP) மதிப்பிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு நெருக்கடியைச் சமாளிப்பது குறித்தும், வளர்ந்து வரும் நாடுகளுக்கான பிரித்தானியாவின் புதிய அணுகுமுறையை வகுப்பது குறித்தும் விவாதிக்க, லண்டனில் முக்கிய உதவி மாநாடு ஒன்றிற்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய வெளிவிவகார செயலாளர் யவெட் கூப்பர் (Yvette Cooper), "ஈரான் சர்வதேச கப்பல் போக்குவரத்துக் பாதையை முடக்கியுள்ளதால், உலகம் ஒரு பாரிய உணவு நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடும் அபாயத்தை நாம் அனுமதிக்க முடியாது.
எனவே, இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே உணவு நெருக்கடியின் விளிம்பில் இருக்கும் நாடுகளுக்கு, இந்தப் புதிய சூழ்நிலை பெரும் சவாலாக அமையுமென சர்வதேச அவதானிகள் கருதுகின்றனர்.