கனடாவில் ரயிலுடன் கார் மோதிய கோர விபத்து: இறந்தவர்கள் புகைப்படம் வெளியானது
ரொறன்ரோவில் சரக்கு ரயில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியான இரு பெண்களின் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்தில் சிக்கிய நான்கு பெண்கள் உட்பட ஐவர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. கல்வி தொடர்பிலும் வேலை நிமித்தமாகவும் குறித்த நால்வரும் கனடா சென்றுள்ளனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிம்கோ கவுண்டியின் New Tecumseth பகுதியில் குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு சுமார் 11 மணி கடந்த நிலையில் அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து சடலமாக பெண் ஒருவரை மீட்டுள்ளனர். மேலும், சாரதி உட்பட நால்வரை ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இன்னொரு பெண் காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார்.
எஞ்சிய மூவர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். ஒரே வாகனத்தில் பயணித்த இவர்கள் ஐவரின் வயதும் 19 முதல் 28 இருக்கலாம் என கூறப்படுகிறது.
மரணமடைந்த இரு பெண்களும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் ஜசன்பிரீத் கவுர், இவரது உறவினர் ஒருவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது இவர்களின் புகைப்படங்கள் இந்தியாவில், அவர்களின் உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட பலம்பிரீத் கவுர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இவர்கள் சென்ற வாகன சாரதி ரயில்வே கிராசிங்கில் சிக்னலை கவனிக்காததால் இந்த விபத்து நடந்ததுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சரக்கு ரயில் கார் மீது மோதியதால் காரானது ஒரு கி.மீ.க்கு மேல் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ரொறன்ரோ பொலிசார் இதுவரை உத்தியோகப்பூர்வ தகவலை இந்த விவகாரம் தொடர்பில் வெளியிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது.