டொராண்டோவில் நுளம்புகள் தொல்லை- பொது மக்களுக்கு எச்சரிக்கை!
கனடாவின் டொராண்டோ நகரில் மீண்டும் நுளம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 'வெஸ்ட் நைல் வைரஸ்' மனித பாதிப்பு பதிவாகியுள்ளதாக டொராண்டோ பொது சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இந்த வைரஸ் முதன்முதலில் 1937 ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள 'வெஸ்ட் நைல்' என்ற பகுதியில் கண்டறியப்பட்டது.
2000-களின் தொடக்கத்தில், இடம்பெயரும் பறவைகள் (காகங்கள், மைனாக்கள் போன்றவை) மூலமாக இந்த வைரஸ் கனடாவுக்குப் பரவியது.

நுளம்புகள் பறவைகளைக் கடித்து, பின்னர் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.
ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் ஜூலை இறுதி நிலவரப்படி 17 நுளம்பு மாதிரிகளில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டொராண்டோவில் பெய்த அதிக மழை காரணமாகத் தேங்கியுள்ள நீர், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக அமைந்துள்ளது.
கடந்த குளிர்காலத்தில் பெய்த அதிக பனிப்பொழிவு, குளிர்காலத்தில் வாழும் நுளம்புகளையும் அவற்றின் முட்டைகளையும் பாதுகாக்கும் ஒரு அரணாக அமைந்துவிட்டது.
பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை உச்சத்தை அடையும் எனவும், செப்டம்பர் மாதம் வரை இதன் தாக்கம் இருக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக இந்த வைரஸால் பாதிக்கப்படும் 70% முதல் 80% பேருக்கு எந்தவொரு அறிகுறியும் வெளியே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.