சொந்த மக்கள் பலரை தவிக்கவிட்டு... ஆப்கானிஸ்தானில் கனடா அரசாங்கத்தின் முடிவு
ஆப்கானிஸ்தானில் இருந்து கனேடியர்கள் மற்றும் அப்பாவி ஆப்கன் மக்களை வெளியேற்றும் பணியை கனடா அரசாங்கம் முடித்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையம் அருகாமையில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட சில மணி நேரம் முன்னர் இந்த அதிரடி முடிவை கனடா அரசாங்கம் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில் இதுவரை 3,700 மக்களை கனடா அரசாங்கம் மீட்டுள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் கனேடிய மக்கள் இன்னும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் கனடா நிர்வாகம் காபூலில் இருந்து வெளியேற்றும் பணியை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் எத்தனை கனேடியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர் என்ற உறுதியான தகவல் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் முடிவுக்கு வந்துவிடவில்லை எனவும், அங்குள்ள தற்போதைய சூழல் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நேச நாடுகளுடன் இணைந்து எதிர்வரும் நாட்களில், ஆப்கானில் சிக்கியுள்ள எஞ்சிய கனேடியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் தேர்தலை எதிர்கொள்ளும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 20,000 ஆப்கன் மக்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்க உறுதி அளித்துள்ளார். இதுவரை ஆப்கானிய மக்களிடம் இருந்து 2,500 குடியுரிமை விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாகவும், இது 8,000 மக்களுக்கு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி கனடா நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் 39.6 மில்லியன் டொலர் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் செலவிட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.