கொரோனா கட்டுப்பாடுகளால் மரணத்தின் விளிம்பிலிருக்கும் தாயை சந்திக்க முடியாத நிலையிலிருக்கும் கனேடியர் விடுத்த கோரிக்கை... குவிந்த உதவிகள்
மரணத்தின் விளிம்பிலிருக்கும் தன் தாயை சந்திக்க கொரோனா கட்டுப்பாடுகள் தடையாக இருப்பதால் சமூக ஊடகம் ஒன்றில் உதவி கோரினார் ஒரு கனேடியர்.
அதைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த பதில்களால் இப்போது திக்குமுக்காடிப்போயிருக்கிறார் அவர்.
Nova Scotiaவில் வாழும் Aaron Wylie, 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தன் தாயை கடைசியாக பார்த்தார் அவ்வளவுதான்.
அதற்குப் பிறகு இந்த கொரோனா கட்டுப்பாடுகளும் சேர்ந்துகொள்ள, அவரால் தன் தாயை சந்திக்க முடியவில்லை.
அப்படி இருக்கும் ஒரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
பேசியது, அவரது தாயேதான்... ஆனால், அவர் கூறியது ஒரு பயங்கர செய்தி. ஆம், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாய் இன்னும் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.
பேருந்து சாரதியாக பணியாற்றும் தன்னிடம் போதுமான விடுப்பும் இல்லாமல், வசதியும் இல்லாமல், கொரோனா கட்டுப்பாடுகளும் அவரது தாய் வாழும் New Brunswick பகுதிக்கு செல்ல அனுமதிக்காது என்பதால் திகைத்துப் போனார் Aaron.
இந்த விடயத்தை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டு உதவி கோரியுள்ளார் Aaron. அவர் அந்த தகவலை பதிவேற்றிய அடுத்த நிமிடம், தொலைபேசி ஒலிக்கத் துவங்கியுள்ளது.
அவரது செய்தியை ஒருவர் பேஸ்புக்கில் பதிவேற்ற, 5,000 முறை வேகமாக பகிரப்பட்டுள்ளது அது. ஏராளமானோர் அவருக்கு உதவ முன்வந்துள்ளார்கள்.
அதில் ஒருவர், தான் மருத்துவரை சந்தித்து தனது கல்லீரல் Aaronஇன் தாய்க்கு பொருத்தமாக இருக்குமா என்று பார்த்து கல்லீரல் தானம் செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டார்.
சிலர் பண உதவி செய்ய முன்வந்துள்ளர்கள். சிலரோ, Aaron தன் தாயைக் காணச் செல்லவேண்டிய பாதையில் பயணிக்கும் விதத்தில் அவருக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ளார்கள்.
அவர்களது உதவிகள் கண்டு பிரமித்துப் போனதாகக் கூறும் Aaron, ஒருவேளை விதிகள் மீண்டும் மாறி, தன் தாயை சந்திக்காமலே போகும் ஒரு நிலை உருவானால் கூட, என்னை யார் என்றே அறியாத இத்தனைபேர் எனக்கு உதவினார்கள் என்ற அந்த எண்ணமே எனக்குப் போதும் என நெகிழ்கிறார்.