புதிய பிரதமர் பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றம் கலைப்பு ; கனடாவில் பரபரப்பு
கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி (Mark Carney ) , நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து பொதுத் தேர்தல் நடத்த அறிவித்துள்ளார்.
அதன்படி வரும் அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 28ஆம் திகதி தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபரல் கட்சி- கன்சர்வேடிவ் கட்சி கடும் போட்டி
கனடாவில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் மத்தியிலும் ஆளும் லிபரல் கட்சிக்குள்ளும் அதிருப்தி அதிகரித்த நிலையில், அவர் கடந்த மாதம் பதவியை ராஜிநாமா செய்தார்.
தொடர்ந்து, பொருளாதார நிபுணரான மார்க் கார்னி (Mark Carney ) புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 14ஆம் திகதி மார்க் கார்னி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
பதவியேற்ற 10 நாட்களில், நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள கார்னி (Mark Carney ) ,
டிரம்ப் நம்மை சிதைக்க நினைக்கிறார். ஆனால், அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அவரது அழுத்தங்களை எதிர்கொள்ள வல்ல தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் கனடாவில் தற்போது, ஆளும் லிபரல் கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் கடுமையான போட்டியில் உள்ளன.