சர்வதேச மாணவர்கள் தொடர்பில் கனடா அரசு எடுக்கவிருக்கும் ஒரு நடவடிக்கை
கனடாவுக்கு வருபவர்களைவிட கனடாவிலிருந்து வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என கனடாவின் பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
கனடாவில் சர்வதேச மாணவர்கள் தொடர்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அது தொடர்பில் கனடா அரசு நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளது.
சர்வதேச மாணவர்கள் தொடர்பில் மீளாய்வு
கனடாவில் கனேடிய இளைஞர்கள் சந்திக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வீடுகள் தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகளுக்கு சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பே காரணம் என கன்சர்வேட்டிவ் கட்சியினர் உட்பட பலரும் விமர்சனம் முன்வைத்துவருகிறார்கள்.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரான Pierre Poilievre, அடுத்த சில ஆண்டுகளில், கனடாவுக்கு வருபவர்களைவிட கனடாவிலிருந்து வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், கனடாவுக்குக் கல்வி கற்க வரும் மாணவர்கள், முறைப்படி நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறாமல், புகலிடம் கோரி விண்ணப்பிப்பதன்மூலம் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவது அதிகரித்துவருகிறது.
ஆக, சர்வதேச மாணவர்கள் தொடர்பில் மீளாய்வு ஒன்றை நடத்த, கனடாவின் ஃபெடரல் ஆடிட்டர் ஜெனரல் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மீளாய்வின் முடிவுகள், 2026ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக ஆடிட்டர் ஜெனரலான Karen Hogan அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதால், மீளாய்வில் என்னென்ன விடயங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படப்போகின்றன என்பது போன்ற விவரங்களை இப்போதைக்கு வெளியிட இயலவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.