கனடா தபால் நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்
கனடாவில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவரும் ‘வீடு வீடாகச் சென்று தபால் வழங்கும் சேவை’ (Door-to-door delivery) விரைவில் நிரந்தரமாக நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
மத்திய அரசு கடந்த இலையுதிர்காலத்தில் வழங்கிய அறிவுறுத்தலின்படி, கனடா தபால் நிறுவனம் தனது வணிக மாதிரியில் பாரிய மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.
வரி செலுத்துவோர் மீது மேலதிக சுமை விழாமல், மாறிவரும் கனடியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மறுசீரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கனடா தபால் நிறுவனம் திங்களன்று மின்னஞ்சல் மூலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனடா தபால் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பல பில்லியன் டாலர்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், அது தற்போது ஒரு 'இருப்புச் சிக்கலை' (Existential crisis) எதிர்கொண்டுள்ளதாகவும் அரசு மாற்றங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஜோயல் லைட்பவுண்ட் (Joël Lightbound) கடந்த செப்டம்பரில் எச்சரித்திருந்தார்.
நிறுவனம் தற்போது வொல்வா தகுதியற்ற (Insolvent) நிலையில் இருப்பதாகவும், அதன் இருப்பை உறுதிப்படுத்த தபால் விநியோகத் தரநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் ஒரு பகுதியாகவே, தற்போது எஞ்சியுள்ள பகுதிகளில் வழங்கப்படும் வீடு வீடாகத் தபால் விநியோகச் சேவையை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக பொதுவான 'சமூகத் தபால் பெட்டிகள்' (Community mailboxes) மூலம் விநியோகம் செய்யும் முறைக்கு மாறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசின் இந்த முடிவுக்குத் தபால் ஊழியர் சங்கம் (CUPW) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் வேலைவாய்ப்பைப் பாதிப்பதோடு, தபால் சேவையை அதிகம் நம்பியிருக்கும் கிராமப்புற மக்களைப் பெரிதும் பாதிக்கும் என்று சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, தற்போது புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் வாக்கெடுப்புகள் நடந்து வரும் சூழலில், இத்தகைய அறிவிப்பை வெளியிடுவது பேச்சுவார்த்தைச் செயல்முறையை திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும், இந்தத் திட்டம் தொடர்பான விரிவான விபரங்களை அரசு இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மறுபுறம், கனடா தபால் நிறுவனம் ஒரு முக்கியமான திருப்புமுனையை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'கனடிய தபால் சேவை சாசனத்தில்' (Canadian Postal Service Charter) திருத்தங்களை மேற்கொள்வது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.