தாலிபான் வசமான ஆப்கானிஸ்தான்: தூதரக உறவுகளை முறித்துக் கொண்ட கனடா
ஆப்கானிஸ்தானில் இனி தாலிபான்கள் ஆட்சி என முடிவாகியுள்ள நிலையில், தூதரக உறவுகளை மொத்தமாக முறித்துக் கொண்டுள்ளது கனடா.
ஆபாகானிஸ்தானில் தற்போதைய சூழ்நிலையானது கடுமையான சவால் என குறிப்பிட்டுள்ள கனேடிய நிர்வாகம், அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்தோலோசித்த பின்னர், காபூலில் இராஜாங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கனேடிய மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், காபூல் நகரில் இருந்து தூதரக அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வருப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆப்கானிஸ்தானில் நிலைமைகள் சீரானதும் மீண்டும் தூதரக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையைக் கண்டித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் நாட்டிற்கும் கனடா அர்ப்பணிப்புடன் இருக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ள 20,000 அகதிகளை ஏற்க கனடா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கனடாவுக்காக உழைத்த ஆப்கான் மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை கனடாவுக்கு அழைத்துவர உரிய நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கனேடிய தூதரகம் இப்போது மூடப்பட்ட நிலையில், ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் உள்ள தூதரகம் உட்பட பிராந்தியத்தில் உள்ள மற்ற கனேடிய தூதரக அதிகாரிகள், தஞ்சம் கோரும் ஆப்கான் நாட்டவற்களுக்கான ஆவணங்களை செயலாக்குகின்றனர் என்று அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.
இருப்பினும், தற்போதைய சூழலில் ஆவணங்கள் அல்ல, அப்பாவி மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என்பதே முன்னுரிமை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.